ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, மீண்டும் நடத்தக் கோரி கார்கில் போர் வெற்றிப் பதக்கத்தை சேலம் மாவட்ட கலெக்டரிடம் முன்னாள் விமானப்படை வீரர் திருப்பிக் கொடுத்து, தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை கடந்த 2 ஆண்டுகளாக நடத்த விடாமல் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, ஜல்லிக்கட்டு நடக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தடை விலக்கப்படாததால், ஏமாற்றம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி அவசரச்சட்டம் இயற்றக்கோரி கடந்த 2 நாட்களாக மாநிலம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் தன் எழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம், மூலப்பாதை, கச்சுப்பள்ளி, காமராஜர் நகரைச் சேர்ந்த முன்னாள் விமானப்படை வீரரான ரா.செல்வராமலிங்கம், என்பவர் கார்கில் போர் வெற்றி நினைவாக தனக்கு மத்திய அரசு வழங்கிய பதக்கத்தை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கலெக்டரிடம் திருப்பிக் கொடுத்தார்.

முன்னாள் விமானப்படை வீரரான செல்வராமலிங்கம், கடந்த 1998-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் பங்கெடுத்ததால், அவருக்கு மத்தியஅரசு சார்பில் ‘ஆப்ரேஷன் விஜய்’ பதக்கம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மாவட்ட கலெக்டரிடம் அவர் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது-

நான் ஒரு முன்னாள் விமானப்படை வீரர். கார்கில் போராளி. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை கடந்த 3 ஆண்டுகளாக நடத்த முடியாமல் போனதை நினைத்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். கார்கில் போர் வெற்றியின் நினைவாக எனக்கு அரசு ஆப்ரேஷன் விஜய் என்ற பதக்கத்தை அளித்து இருந்தது.

அதே மீண்டும் அரசிடமே திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளேன். 
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினால் மட்டுமே பதக்கத்தை திரும்பப் பெறுவேன் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசிடமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக சென்னை, உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் இளைஞர்கள் தன் எழுச்சியாக போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், விமானப்படை வீரரின் இந்த போராட்டம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது