ஜல்லிக்கட்டு விவகாரம் சென்னையில் பெரும் தீயாய் பற்றி எறிவது தமிழகம் முழுவதும் பெரிய வீச்சை ஏற்படுத்தியுள்ளது.
தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக தமிழக அரசு தடுமாறி வருகிறது.
நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காமல் போகும் மாணவர்களை கட்டுபடுத்த ஐபிஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் சாமர்த்தியமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட மாணவர்கள் அவர் பேச்சை சட்டை செய்யாமல் தங்கள் கோரிக்கையிலிருந்து இறங்கி வர மறுத்து விட்டனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம் அலங்காநல்லூரில் லேசாக பற்றி எரிந்த போதே அதை லாவகமாக கையாளாமல் அலட்சியமாக அடித்து விரட்டலாம் என்று நினைத்த தமிழக அரசு அதன் காவல்துறை அதன் பலனை நேற்றிரவு முதல் அனுபவித்து வருகின்றனர்.
இந்தி எதிர்ப்பை போர் 50 ஆண்டுகளுக்கு பிறகு 3 தலைமுறைகள் கடந்த பின்னர் எப்படி இருந்திருக்கும் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு காட்டும் வகையில் இந்த போராட்டங்கள் அமைந்துள்ளது.
30 மணி நேரத்தை கடந்து சென்னை மெரீனாவில் கூடியுள்ள கலையாத போராட்ட குழுவினரும் நேரம் செல்ல செல்ல சென்னை முழுவதும் பள்ளி கல்லூரிகளில் இருந்து அலை அலையை வந்து கொண்டிருக்கும் மாணவ மாணவியர் தமிழக அரசை மட்டுமல்ல மத்திய அரசையும் அவர்களுடய நுனி வேர் வரை பீதியை கொண்டு சேர்த்துள்ளனர்.
மெரீனாவில் போராட்டகாரர்களுடன் பேசுவதற்கு தைரியமில்லாத அரசியல்வாதிகள் தேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி மைலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணனை போராடும் மாணவர்களுடன் பேச்சு வார்த்தைக்கு அனுப்பினர்.

மாணவர்கள் இடையே பேச்சுவார்த்தைக்கு இறங்கிய மயிலாப்பூர் துணை ஆணையர் லாவகமாக அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தான் மதுரை எஸ்.பியாக இருந்த போது நீதிமன்ற உத்தரவின் படி அலங்காநல்லூர் ஜல்லிகட்டை அங்குள்ள மக்கள் ஒத்துழைப்புடன் அமைதியாக நடத்தி முடித்து கொடுத்தேன். உங்கள் உணர்வுடன் ஒத்த கருத்துள்ள என்னுடைய பேச்சை கேளுங்கள்.

அரசாங்கம் உங்கள் கோரிக்கை அனைத்தையும் ஏற்க தயாராக உள்ளது. நீங்கள் ஒரு அமைப்பின் கீழ் இருந்தீர்களானால் எங்களுக்கு பேச்சு வார்த்தை நடத்துவது எளிது ஆனால் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை பல்லாயிரக்கணக்கில் பரவி கிடக்கும் நீங்கள் தன்னெழுச்சியாக வந்தவர்கள். ஆகையால் தயவு செய்து நீங்கள் அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட வேண்டும் என்று பேசினார்.

அவருடைய சாமர்த்தியமான பேச்சுக்கு கைதட்டிய இளைஞர்கள் உங்கள் பேச்சு நன்றாக இருக்கிறது, ஆனால் அதை ஏற்க முடியாது என்று உறுதியாக தெரிவித்து விட்டனர்.
இதையடுத்து பாலகிருஷ்ணன் சோர்வுடன் திரும்பி சென்றார். எத்தகைய சாமர்த்தியமும் ஜால வித்தையும் இளைஞர்களிடம் எடுபடவில்லை.
அவர்களின் ஒரே கோரிக்கை முதல்வர் வரட்டும் என்பது தான்,
அது வரும் வரை அவர்கள் போராட்டமும் நிற்காது என்பது நிதர்சனம்.
