ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீராவேசமாக உரையாற்றிய காவலர் சிலமணி நேரங்களில் உலகம் முழுதும் பிரபலமாகி விட்டார். காவல் பணியின் ஒழுக்க முறைகள் கடந்து அவர் பேசியது அவரது காவல் பணியில் வேலையிழந்தால் தங்கள் நிறுவனம் அவருக்கு குறைந்த பட்சம் ரூ. 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை தருவதாக பல நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆவேசம் , கோபம் , துரோகம் என நிகழ்வுகள் இருந்தாலும் நெகிழ்ச்சியான , உணர்ச்சிகரமான சம்பவங்களும் நடக்கத்தான் செய்தது. அதில் ஒன்றுதான் இன்று காலை காவலர் ஒருவர் காவல் பணியின் விதிமுறை மீறி உரையாற்றி இளைஞர்களின் கரவொலி பெற்று உள்ளத்தை கொள்ளை கொண்டார்.

மதியழகு என்ற பெயர் கொண்ட காவலர் மதியால் மட்டும் அல்ல உருவத்தாலும் அழகுதான். கட்டிளங்காளையான ராமநாதபுரத்தை சேர்ந்த இளைஞர் மதியழகுக்கு காளைகளின் வாழ்வாதாரம் குறித்த பதிவுகளை படித்து மனதளவில் அதில் உடன்பட்டிருந்தார்.

எல்லா இளைஞர்களுக்கும் உள்ள உணர்வும் , தமிழுணர்வும் அவருக்கும் எழத்தான் செய்தது. ஆனால் பணி காக்கிச்சட்டை பணி . உள்ளத்தில் இருப்பதை உள்ளுக்குள் வைத்து செய்யும் பாதுகாப்பு பணி. 

தினந்தோறும் எழுச்சியுடன் நடக்கும் மெரினா கடற்கரையில் இவருக்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டது. தினந்தோறும் நடந்த நிகழ்வுகள் அவருக்குள் ஒரு உணர்வை தூண்ட இன்று பொங்கிவிட்டார்.

ஒரு தேர்ந்த அரசியல் தலைவர் போல் அவர் பேசிய பேச்சுகள் தமிழகம் தாண்டி உலகம் முழுதும் எதிரொலிக்கிறது. ஆயுதப்படையில் எஸ்கார்ட் டூட்டி பார்த்துவரும் மதியழகு இன்று தமிழகம் முழுதும் உள்ள போலீஸ் இளைஞர்களின் ஆதர்ஷ புருஷனாகிவிட்டார்.

போலீஸ்காரர்கள் நடத்தும் நூற்றுக்கணக்கான வாட்ஸ் அப் குரூப்களில் ப்ரஃபைல் பிக்சராக இவர் படத்தை பெருமையுடன் வைத்துள்ளார்கள்.

இந்நிலையில் காவலர் பணி மறந்து அரசாங்கத்துக்கு எதிராக பேசியதும், விமர்சித்ததும் அவரது பணிநீக்கத்துக்கு போதுமானது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். 

அதை மீறி அவர் மீது நடவடிக்கை எடுத்தால் வேலை போனால் குறைந்த 30 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு அமர்த்த நாங்கள் தயார் என பல நிறுவனங்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.