ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி மின் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற மாணவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இன்று காலை கல்லூரிக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தொழில்நுட்ப கல்லூரி (பாலிடெக்னிக்) இரண்டாம் ஆண்டு படித்து வரும் வள்ளிபட்டு கிராமத்தை சேர்ந்த மாணவர் சுரேஷ் கல்லூரி சாலையில் உள்ள மின் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இவர் மின் கம்பத்தில் ஏறுவதை பார்த்து சக மாணவர்கள் உடனடியாக மின் கம்பம் அருகே உள்ள மின் மாற்றியை அனைத்து மின்சாரத்தை துண்டித்து மாணவனை கீழே இறங்கி வரும் படி அறிவுறுத்தி உள்ளனர்.
இருப்பினும் உணர்வை கட்டுபடுத்த முடியாமல் மாணவன் சுரேஷ் மின் கம்பத்தில் இருந்து கீழே குதித்ததில் கை மற்றும் கால் எலும்புகள் முறிந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு முதலுதவிகள் செய்யப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சக மாணவர்கள் கண்ணெதிரே மாணவர் சுரேஷ் ஜல்லிக்கட்டு தடை நீக்ககோரி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் மாணவர்கள் சேகமடைந்துள்ளனர். இருப்பினும் மாணவர்கள் மனம் தளராமல் கல்லூரி வளாகத்தில் முன்பு அமர்ந்து அறவழியில் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
