ஜாக்டோ ஜியோ போராட்ட வழக்கு..! நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் தலைமை செயலாளர்..!
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 7-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, போராட்டத்தை தொடர்ந்து நடத்தியதற்கான விளக்கத்தை அளித்தனர். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், உடனடியாக பணிக்குத் திரும்புமாறு உத்தரவிட்டனர். அப்படி திரும்பினால், தலைமை செயலாளரை நீதிமன்றத்துக்கு அழைத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கவனிக்குமாறு உத்தரவிடுமாறு தெரிவித்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட அரசு ஊழியர்கள், பணிக்குத் திரும்ப ஒப்புக் கொண்டதையடுத்து, தலைமை செயலாளரை செப்டம்பர் 21-ம் தேதி(இன்று) நேரில் ஆஜராகி அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டார்.
நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையின்போது தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கிறார்.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்ற உத்தரவு வரும் என ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.