Jacot - Jio - Graaf Alliance hunger strike in Karur
கரூர்
கரூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ - கிராப் கூட்டமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில், ஏராளமானோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
கரூர் மாவட்டம், கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஜாக்டோ - ஜியோ - கிராப் கூட்டமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் சு.பாரதிதாசன் தலைமைத் தாங்கினார்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ரா. மணிகண்டன் வரவேற்றார்.
உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர்கள் சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ம.விஜயகுமார், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணை பொதுச்செயலாளர் எம்.பத்மநாபன் ஆகியோர் தொடக்கி வைத்துப் பேசினர்.
இந்தப் போராட்டத்தில், "1.4.2003 முதல் பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அரசு அலுவலர்கள்-ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு அலுவலர்கள் - ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு நிலுவைத்தொகையினை 1.1.2016 முதல் பணப்பயனாக வழங்கிட வேண்டும்.
தமிழக அரசில் 1987 முதல் 89 வரை ஒப்பந்த அடிப்படையிலும், 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தொகுப்பூதிய காலத்தினை பணிவரன்முறை செய்து வழங்கிட வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
