ரூ.90 கோடி வரி ஏய்ப்பு செய்த கோல்டு வின்னர் கம்பெனி : 107% அபராதம் விதித்த வருமான வரித் துறை!!!
பிரபல எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான கோல்டு வின்னர் கம்பெனி 90 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளது என்றும், அந்நிறுவனத்துக்கு 107 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
கோல்டு வின்னர் சமையல் எண்ணெய், எல்டியா தேங்காய் எண்ணெய் உள்பட பல்வேறு ஆயில்களை தயாரித்து வரும் பிரபல தனியார் நிறுவனம் காளீஸ்வரி ரீபைனரி. சென்னை மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, கோல்டு வின்னர் நிறுவன உரிமையாளர் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான 54 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில், பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோல்டு வின்னர் நிறுவனம் 90 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அந்நிறுவம் ஒப்புக் கொண்டள்ளதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
5 நாட்கள் வருமான வரித்துறை நடத்திய பல்வேறு சோதனைகளில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் அந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வருமான வரித்துறை விதிமுறைகளின்படி 107 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை உடனடியாக காளீஸ்வரி நிறுவனம் செலுத்தவும் வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.