பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது எதுவும் பேசாமல் சென்றது வருத்தம் அளிக்கிறது - அர்ஜூன் சம்பத்...
தஞ்சாவூர்
பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எதுவும் பேசாமல் சென்றது வருத்தம் அளிக்கிறது என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், அர்ஜூன் சம்பத் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், "தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி அனைவரும் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எதுவும் பேசாமல் சென்றது வருத்தம் அளிக்கிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆறு மாதங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்பின்படி தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டிய வழிவகையை மத்திய அரசு செய்ய வேண்டும்.
தாம்பரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கடந்த ஏழு வருடங்களாக 1500–க்கும் மேற்பட்ட முதியோர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். அவர்களின் உடல் உறுப்புகள், எலும்புகள் ஆகியவை கடத்தி விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்து மக்கள் கட்சியினர் அந்த முதியோர் இல்லத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தோம்.
அப்போது வேலூர், பாளையங்கோட்டை, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ஏழு இடங்களில் இதுபோன்ற கருணை இல்லங்கள் நடத்தப்படுவது தெரியவந்தது. இது எதுவுமே முறையாக அனுமதி பெறப்படாமலும், உரிமம் புதுப்பிக்கப்படாமலும் நடத்தப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரையில் வழக்குபதிவு செய்யவில்லை. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
இதனை வலியுறுத்தி வருகிற 5–ஆம் தேதி முதல் அந்த முதியோர் இல்லங்கள் முன்பு இந்து மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளோம்.
கோவில்களில் சிலைகள் மாயமான வழக்குகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்குக்கு அறநிலையத்துறையும், அரசும் போதிய ஒத்துழைப்பு தரவில்லை. சாலை பாதுகாப்ப்பு இடத்தில் சிலை வைக்காமல் அந்தந்த கோவல்களிலேயே சிலைகளை வைத்து பூஜித்து பாதுகாக்க வேணடும.
தமிழகத்தில் கோவில்களுக்குள்ளே உள்ள கடைகளை நீண்டகால குத்தகைக்கு விடும் விதிகளை திருத்தம் செய்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பொது ஏலத்தில் விட்டால் கோவிலுக்கு வருமானம் கிடைக்கும்" என்று அவர் கூறினார்.