மேலூர் சாமியின் உறவினராம் இந்த இஷிகா.... 'ஜெ.' இனிஷியலால் குழப்பம்!
சில தினங்களுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஐ.டி. விங்-ன் மகளிர் அணி பிரிவின் செயலாளராக பெங்களூருவைச் சேர்ந்த ஜெ.இஷிகா என்ற பெண் நியமிக்கப்பட்டார்.
சில தினங்களுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஐ.டி. விங்-ன் மகளிர் அணி பிரிவின் செயலாளராக பெங்களூருவைச் சேர்ந்த ஜெ.இஷிகா என்ற பெண் நியமிக்கப்பட்டார். கட்சியின் துணை பொது செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டிடிவி தினகரனைச் சந்தித்து பதவி கொடுத்ததற்காக நேரில் சென்று நன்றி தெரிவித்து வாழ்த்தும் பெற்றார்.
கடந்த 4.10.2018 அன்று டிடிவி தினகரன் வெளியிட்டிருந்த அறிவிப்பில் உலக வரலாற்றில் ஜெயலலிதாவால் தான் ஐடி விங் உருவாக்கப்பட்டது. அந்த வழியில் வந்த அமமுக சார்பான செய்திகளை எட்டுதிக்கும் எடுத்துரைத்து சிறப்பபோடு செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப பிரிவை மேலும் மேம்படுத்தும் வகையில் அது இரு பிரிவுகளாக பிரிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதன்படி, அமமுக தொழில்நுட்ப பிரிவு ஆண்கள் - பெண்கள் என இரண்டு சார்புகளாக பிரித்தார். அதோடு மட்டுமின்றி ஐ.டி.விங் மகளிர் பிரிவு செயலாளராக திருமதி ஜெ.இஷிகா, பார்க்டவுன், பி.என்.டி.நகர் மதுரை என்ற நபரை நியமித்தார். அதன் பின்னர், இஷிகா, தினகரனை சந்தித்த போட்டோ வாட்ஸ்அப்-ல் வைரலாகிப்போனது.
அந்த புகைப்படத்தோடு இருந்த வாசகங்கள்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, ஜெ.இஷிகா என்றவுடன் அவர் டிடிவியின் நீண்ட நாள் உதவியாளரான ஜனாவின் மனைவி என செய்தி பரவியது.
இதனடிப்படையில், சில ஊடகங்களும், ஜனாவின் மனைவி அமமுகவின் முக்கிய பொறுப்பை பெற்றுவிட்டார் என செய்திகளும் வெளியிட்டன. ஆனால், விசாரித்ததில் டிடிவி உதவியாளர் ஜனாவுக்கும், ஐ.டி.விங்-ன் புதிய நிர்வாகியான ஜெ.இஷிகாவுக்கும் எந்தவகையிலும் சம்பந்தம் கிடையாதாம்.
ஜெ.இஷிகா என்பவர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், அமமுகவின் தூணாக இருந்தவர்களில் ஒருவரான மேலூர் சாமியின் நெருங்கிய உறவினராம். மேலூர் சாமிக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே கட்சியில் ஈடுபாடோடு செயல்பட்டு வந்த இஷிகாவுக்கு பொறுப்பு கொடுத்தாராம் டிடிவி தினகரன்.
புதிய பொறுப்பாளரான இஷிகா நம்மிடம் பேசியபோது தாம் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்றும், கணவர் பெயர் ஜக்கு என்றும் கூறினார். இவர் புனேயில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் பயின்றவராம். ஜக்கு எனும் இவரது கணவர் பெயரை தவறாக புரிந்து கொண்ட சிலர், ஜனாவின் மனைவி என செய்தி வெளியிட்டு விட்டதால் மிகுந்த மனவேதனைக்கு ஆளானதாகவும், டிடிவியின் உதவியாளர் ஜனா மீது தாம் மிகுந்த மரியாதையும், பற்றும் வைத்துள்ளேன். இதுபோன்ற செய்திகளை இனி செய்தி நிறுவனங்கள், சரிபார்த்துவிட்டு வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.