ஈஷா யோகா மையம் அனுமதியின்றி கட்டடங்களை கட்டி வருகிறது – தமிழக அரசு புகார்
சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 44 ஆயிரம் சதுர அடி பரப்பிலான கட்டடங்களை இடிப்பதற்கு ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இப்போது 112 அடி உயரமுள்ள சிவன் சிலை நிர்மாணிக்கப்பட்டிருப்பது குறித்து சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்கள், சலுகை விலையில் மின்சாரம், தொடர்ந்து கட்டுமானப் பரப்பை அதிகரித்துக்கொண்டே போவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இதுவரை 5 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
இதனிடையே அனுமதி இன்றி கட்டடங்கள் கட்டி வருவதாகவும், சிவன் சிலை, மூன்று மண்டபம் கட்ட ஏராளமான நிலங்களை ஆக்கிரம்பித்து வனங்களை அளித்து வருவதாகவும், வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத் தலைவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், கோவை மண்டல நகரமைப்பு துணை இயக்குனர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், உரிய அனுமதி இல்லாமல் ஈசா மையம் கட்டிடங்களை கட்டி வருவதாகவும், 109 ஏக்கர் நிலத்தில் அங்கீகாரம் பெறாத கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத வழிபாட்டை கருத்தில் கொண்டு 19.45 ஹெக்டேர் விளைநிலத்தை மாற்ற கோவை மாவட்ட ஆட்சியர் அனுமதி அளி்த்தார்.
சிவன் சிலை அமைப்பு பற்றிய ஆவணத்தை தாக்கல் செய்ய ஈசாவிடம் கேட்டுள்ளதாகவும், அங்கீகாரம் பெறாத கட்டடத்துக்கு அபராதம் வசூலிக்காததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிபிடப்பட்டுள்ளது.
இதையடுத்து உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.