ஐபிஎஸ்., அப்பாவும் அவரை ஐஏஎஸ்.,ஆகச் சொன்ன அம்மாவும் செய்த தவறு... ஒன்றரை வயசு பிஞ்சும் ஜெயிலில்!
ஐஏஎஸ்., தேர்வில் கணவர் ஷபீர் கரிமுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட ஜாய்சி, தனது ஒன்றரை வயதுக் குழந்தையுடன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தன் தாயைப் பிரிந்திருக்க இயலாமல் குழந்தை அழுததால், வேறு வழியின்றி தாயுடன் குழந்தையும் அனுப்பப் பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சினிமாவில் இருந்து மக்கள் நல்லது எதையும் கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ... மோசமான விஷயங்கள் மட்டும் உடனே பரவி விடும். கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ஒரு காட்சி வரும். அந்தக் கற்பனைக் காட்சியை நிஜத்தில் உண்மையாக்கி, இப்போது மாட்டிக் கொண்டுள்ளார் ஓர் உயரதிகாரி.
சென்னையில் நடந்த ஐஏஎஸ்., மெயின் தேர்வில், காதில் ஒளித்து வைத்திருந்த ப்ளூடூத் கருவி மூலம் ஹைதரபாத்தில் இருந்த தன் மனைவியிடம் இருந்து பதில்களைப் பெற்று தேர்வு எழுதினார் ஐபிஎஸ் அதிகாரி 'சபீர் கரீம்’ என்ற குற்றச்சாட்டின் பேரில், அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, அவர் தனக்குத் தானே ஏதோ பேசிக் கொண்டிருக்க, அதனை கவனித்த கண்காணிப்பாளர் அவரை சோதனையிட்டு, உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
‘யுபிஎஸ்சி’ நடத்துகின்ற, நாட்டின் மிக முக்கியப் பொறுப்புகளை வகிக்கக் கூடிய அதிகாரிகளைத் தோற்றுவிக்கும் இந்தத் தேர்வுகளுக்கு இருக்க வேண்டுமா கூடாதா? கடினமான சோதனைகள் நிச்சயம் இருந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், இதை எல்லாம் கடந்து, அந்த அதிகாரி சபீர் கரீம் எப்படி ப்ளூடூத் கருவியை எடுத்துச் சென்றிருக்க முடியும்..? எல்லோர் மனத்திலும் எழும் கேள்விதான்..!
காரணம், அவர் 2014ல் ஐபிஎஸ் தேர்ச்சியடைந்து, தற்போது நெல்லை மாவட்ட காவல்துறையில் உயர் பொறுப்பில் இருக்கிறார். அவ்வளவு ‘பெரீய்ய அதிகாரி’யை சோதிப்பதில் சிக்கல்கள் இருந்ததா? அல்லது அவரை சோதிக்காமல் இருப்பதுதான் நமக்கு நன்மை என்று யாரேனும் உள்ளே விட்டுவிட்டார்களா? இவை போன்ற கேள்விகள் மட்டுமல்ல, இதே போன்ற தேர்வில் இவர் ஐபிஎஸ் எப்படி கடந்து வந்திருப்பார் என்ற சந்தேகத்தையும் இப்போது எழுப்பி வருகின்றனர் சமூக வலைத்தளங்களில்!
இவர் மீது சாட்டப்பட்ட குற்றத்துக்காக இவரும் இவர் மனைவியும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இப்போது, அவரது ஐபிஎஸ்., பதவியும் பறிபோகிறது. சினிமாவைப் பார்த்து ஐபிஎஸ் ஆபீசரா வர ஆசைப்பட்டதால், ஐபிஎஸ் தேர்வு எழுதினாராம். தன் மனைவி ஆசைப்பட்டதால், ஐ.ஏ.எஸ் ஆக முயற்சி செய்தாராம். ஆனால் இப்போது, இவர் முன்பு எழுதிய தேர்வுகளிலும் ஏதாவது கோல்மால் செய்திருக்கிறாரா என்ற ரீதியில் விசாரணை செய்துவருவதாகக் கூறப்படுகிறது.