ஐபோன் பயன்படுத்துவோர் உஷார்! போலி உதிரி பாகங்கள் ஜோர் விற்பனை - மேட் இன் நார்த் இந்தியா...
திருநெல்வேலி
வடமாநிலங்களில் தயாரிக்கப்பட்ட ஐபோன் செல்போனின் போலி உதிரி பாகங்கள் திருநெல்வேலியில் விற்கப்படுகிறது. இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தில் பிரபல செல்போன் நிறுவனமான ஐபோனின், தலைமை அதிகாரி சகாயம் புகார் ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில், "எங்களது செல்போன் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவான உதிரி பாகங்களை போன்றே போலியான உதிரி பாகங்களை தயாரித்து யாரோ திருநெல்வேலியில் விற்பனை செய்து வருகின்றனர்" என்றும் "அதிலும் அவை செல்போன் கடைகளிலேயே இந்த போலி உதிரி பாகங்கள் விற்கப்படுக்கிறது" என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் ராஜசுலோச்சனா தலைமையில் காவலளர்கள் மாவட்டத்தில் சோதனை நடத்த முடிவு எடுத்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள செல்போன் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த ஐந்து கடைகளில் ஐபோன் செல்போன் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவான போலி உதிரி பாகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இதனையடுத்து ரூ.7 இலட்சம் மதிப்புள்ள அந்த போலி உதிரி பாகங்களை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
ஐபோன் செல்போன்களின் போலி உதிரி பாகங்களை விற்றதற்காக வடமாநிலத்தைச் சேர்ந்த கிஷோர்சிங் (30), வினோராம் (28), அம்பலால் (38) ஆகிய மூவரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.
பின்னர், கைது செய்யப்பட்டவர்களிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐபோன் செல்போன்களின் போலி உதிரி பாகங்கள் வடமாநிலங்களில் தயாரிக்கப்பட்டு இங்கு கொண்டுவந்து விற்கப்படுகிறது என்ற தகவல் வெளிவந்தது. இதனை கேட்டு காவலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஐபோன் செல்போன்களின் உதிரி பாகங்களை தயாரிப்பது யார்? திருநெல்வேலியில் எங்கெல்லாம் இந்த போலி உதிரி பாகங்கள் விற்கப்படுகின்றன? நெல்லையில் ஐபோன் செல்போனின் போலி உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகிறதா? போன்ற பல்வேறு கேள்விகளுடன் காவலாளர்கள் விசாரணையை தொடர்ந்து நடத்து வருகின்றனர்.