செல்லாத நோட்டு பிரச்சனைக்கு பிறகு மீண்டும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் – ஆட்சியர் அறிவிப்பு…
தேனி
செல்லாத நோட்டு அறிவிப்பால் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது நிறுத்தப்பட்டு இருந்தது. அது, தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டதால் மீண்டும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாய பயிர்க்கடன் வழங்கப்படுகிறது என்று ஆட்சியர் வெங்கடாசலம் அறிவித்துள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “மத்திய அரசு ரூ.500 ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நேரடியாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவது முற்றிலும் தடைப்பட்டது.
கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினராக இருக்கும் விவசாயிகள் பாதிக்காத வகையிலும், கூட்டுறவுச் சங்கங்களின் பணிகள் தொய்வடையாது இருக்கவும் சங்க உறுப்பினர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கும், வங்கி ஒழுங்கு முறைச் சட்டத்திற்கும் உள்பட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் கணக்குத் தொடங்கி தடையின்றி கடன்பெற வழிவகைச் செய்யப்பட்டது.
செல்லாத நோட்டு பிரச்சனைக்குப் பின்னர் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தனிநபர் சேமிப்புக் கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு எவ்வித உச்சவரம்பு இன்றி பணம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பயிர்க் கடன்கள் வழங்குவதற்கான விதிமுறைகளும் தளர்த்தப்பட்டு உள்ளது என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவித்துள்ளார்.
அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு அவர்கள் உறுப்பினராக இருக்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஏற்கனவேவுள்ள நடைமுறையின்படியும், முந்தைய விதிமுறைகளைப் பின்பற்றியும் மீண்டும் விவசாய பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் பயிர்க்கடனைப் பெற்று பயனடையலாம்” என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.