கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்ட செல்லாத நோட்டுகள்…
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட நோட்டு பிரச்சனையில் பழைய நோட்டுகள் சபரிமலை கோவில் கணக்கில் உண்டியல்களில் போடப்ப்ட்டு வருகிறாது. சபரிமலையில் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த சில நாள்களில் சபரிமலை சீசன் தொடங்கியதால் ஆரம்பத்தில் அடியார்கள் சிரமப்பட்டனர். இதற்காக சன்னிதானத்தில் கூடுதல் ஏ.டி.எம். மையங்கள் திறக்கப்பட்டது. இ.காணிக்கை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் அடியார்கள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் கடந்த நான்கு நாள்களாக அடியார்கள் கூட்டம் சபரிமலையில் நிரம்பி வழிகிறது. திங்கள்கிழமை பம்பையில் அடியார்களை தடுத்து நிறுத்தும் அளவு கூட்டம் இருந்தது.
இந்த சீசனில் நடை திறந்த பின்னர் 13.50 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட இரண்டு கோடி ரூபாய் அதிகமாகும். கடந்த திங்களன்று மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு காணிக்கை வருமானம் வந்தது.
இதில், பெரும்பாலும் 500, 1000 நோட்டுகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஏ.டி.எம்கள், இ-சேவை இருப்பதால் புதிய 2000 நோட்டுகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டு வருகிறது. இவை காணிக்கை எண்ணும் இடத்தில் இயந்திரங்கள் மூலம் எண்ணி சாக்குமூடைகளில் அடைக்கப்படுகிறது. காணிக்கை எண்ணுவதற்காக 134 தேவசம்போர்டு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இரண்டு ஷிப்டுகளாக பணிபுரிந்து பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.