நடிகர் ரஜினிகாந்த்தை மிரட்டுவது கண்டிக்கதக்கது – அறிமுக நடிகர் கார்ல்மார்க்ஸ்
திருநெல்வேலி:
ஹாஜி மஸ்தான் வாழ்க்கையை சித்தரிக்கும் பட விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை, மிரட்டுவது கண்டிக்கதக்கது என்று சரவணப் பொய்கை படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கும் நடிகர் காரல்மார்க்ஸ் தெரிவித்தார்.
திருவள்ளுவர் கலைக்கூடம் தனியார் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குனர் சேகர் தயாரிப்பில் “சரவணப் பொய்கை” என்ற படம் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இதன் பாடல் சி.டி., வெளியீட்டு விழா நெல்லை பேரின்பவிலாஸ் தியேட்டரில் நேற்று நடந்தது. இதில், இயக்குனர் சேகர், நடிகர் காரல்மார்க்ஸ் ஆகியோர் சிடியை வெளியிட, பேரின்பவிலாஸ் தியேட்டர் அதிபர் ஜெயராஜ், ரஞ்சித் மற்றும் பாரதி கண்ணன் பெற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இயக்குனர் சேகர் செய்தியாளார்களிடம் கூறியது:
‘இதுவரை 17 குடும்ப படங்களை இயக்கியுள்ளேன். தற்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்றபடி முதல் முறையாக காதல் சப்ஜெக்ட் படத்தை இயக்கியுள்ளேன். சினிமா டிரென்ட் மாறும்போது அதற்கு ஏற்றபடி, நானும், மற்ற இயக்குனர்களும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளியை மையமாக கொண்டது கதை. கதாநாயகனாக எனது மகன் காரல் மார்க்ஸ், கதாநாயகியாக அருந்ததியும் நடிக்கின்றனர்” என்று கூறினார்
படம் குறித்து நடிகர் காரல் மார்க்ஸ் கூறியது”
‘புதுமுகமாக “சரவணப் பொய்கை” படத்தில் அறிமுகம் ஆகியுள்ளேன். படத்தில் விவேக், கருணாஸ், எம்.எஸ்.பாஸ்கர், அருந்ததி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தொழிலாளியாக நான் நடித்த படம் என்பதால் தமிழகம் முழுவதும் தொழிலாளர்கள் அதிகம் உள்ள 100 இடங்களை தேர்வு செய்து படத்தில் பாடல் சிடிக்களை வெளியிட்டு வருகிறோம். எனக்கு மக்கள் நல்ல ஆதரவு தருகின்றனர். தொடர்ந்து அனைவரும் ஆதரித்து படத்தை வெற்றியடைய செய்ய வேண்டும்.
தியேட்டர்களில் படம் வெளியான நாளிலேயே இணையதளம் மூலமாகவும், திருட்டு விசிடி மூலமாகவும் படம் வெளியாகிறது. இதை தமிழக, மத்திய அரசுகள் தலையிட்டு தடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 1-ஆம் தேதி நடிகர் சங்கத் தலைவர் விஷால் தலைமையில் கூட்டம் நடக்கிறது.
ஹாஜி மஸ்தான் வாழ்க்கையை சித்தரிக்கும் பட விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை, மிரட்டுவது கண்டிக்கதக்கது” என்று கூறினார்.