10 அடி பள்ளத்தில் போலீஸ் ஜீப் கவிழ்ந்து இன்ஸ்பெக்டர் படுகாயம் - வேலூரில் அதிகாலையில் பரபரப்பு
வேலூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேல்மொனவூர் பகுதியில் பள்ளிகொண்டா காவல் நிலையம் உள்ளது- இங்கு ராமமூர்த்தி என்பவர் சட்டம் ஒழுங்கு பிரிவில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு பணியில் ராமமூர்த்தி ஈடுபட்டார். இன்று காலை வேலை முடிந்து, அவர் வீட்டுக்கு ஜீப்பில் புறப்பட்டார். சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேல்மொனவூர் ஏரி அருகே சென்று கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி ஜீப், கால்வாய் சாலை நடுவே 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ராமமூர்த்தி படுகாயம் அடைந்தார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். ஜீப் இடிபாடுகளில் சிக்கி கிடந்த அவரை மீட்டு, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தால், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்து தொடர்பாக விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.