நாமக்கல்,
நாமக்கல்லில், 300 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி சல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டி தோழர்கள் இருவர் கைகோர்த்து போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் வேல்முருகன் (22). அதே பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் கவின்ராம் (22). பட்டதாரிகளான இவர்கள் இருவரும் தோழர்கள்.
நாமக்கல்லில் நேற்று நடைப்பெற்ற சல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்ட இவர்கள், நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் இருக்கும் சுமார் 300 அடி உயரம் கொண்ட செல்போன் கோபுரத்தில் ஏறினர்.
அதில், 200 அடி உயரம் வரை ஏறிய அவர்கள், “தமிழகத்தில் சல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும். சல்லிக்கட்டு நடத்த உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்” எறு வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டக் களத்தில் நின்றுக் கொண்டிருந்த காவலாளர்கள் இதைக் கண்டதும், போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன், கவின்ராம் ஆகிய இருவரையும் கீழே இறங்கி வருமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர்கள் இறங்கி வர மறுத்து விட்டனர்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன் மற்றும் காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒலிபெருக்கி உதவியுடன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் கோபுரத்தில் இருந்து இறங்கி வர மறுத்தனர்.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து, அவர்களை இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போதும் அவர்கள் கீழே இறங்காமல் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதையடுத்து சல்லிக்கட்டு ஆர்வலர்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜா கோபுரத்தில் சிறிது தூரம் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரிடமும் பேசி அவர்களை கீழே இறங்க செய்தார்.
கீழே இறங்கி வந்த அவர்கள், “அவசர சட்டம் கொண்டு வந்து தமிழகத்தில் சல்லிக்கட்டை உடனடியாக நடத்த வேண்டும். சல்லிக்கட்டு நடத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றுத் தெரிவித்தனர்.
சல்லிக்கட்டுக்கு ஆதரவாக பட்டதாரி இளைஞர்கள் 300 அடி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
