Indias first transgender advocate
இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக சத்தியஸ்ரீ சர்மிளா பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்தவர் ஆவார். பார் கவுன்சிலில் பதிவு செய்த முதல் திருநங்கை என்ற பெருமைக்கு சத்தியஸ்ரீ சொந்தக்காரரானார். தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலில் சத்தியஸ்ரீ சர்மிளா(36) வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். திருநங்கைகள் சமூகத்தில் பல்வேறு அவலங்களை தினம் தினம் சந்தித்து வருகின்றனர். வீட்டில் ஒதுக்கி வைப்பது, சமூகத்தில் ஒதுக்கி வைப்பது, வேலையின்மை, கல்வியின்மை என எல்லா பக்கமும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். 
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தியஸ்ரீ ஷர்மிலா தனது பெற்றோருடன் வசித்து வந்தார். தான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்ததும் குடும்பத்தினர் அவரை வேறுத்து ஒதுக்க ஆரம்பித்தனர். இதையடுத்து தனது சொந்த ஊரில் கண்ணீர் மல்க வெளியேறினார். இந்த சமூகத்தில் சிறப்பு அந்தஸ்துடன் வாழ வேண்டும் என வைராக்கியத்தை தனக்குள் விதைத்துக் கொண்டார். சென்னைக்கு வந்த அவர் செங்கல்பட்டு அருகே மற்றொரு திருநங்கை அவருக்கு ஆதரவு அளித்தார்.
ஏற்கெனவே சட்டக் கல்லூரியில் படிப்பை முடித்தவர் என்பதால் வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடர விரும்பினார். ஆனால்
திருநங்கைகளுக்கு அங்கீகாரம் கிடைத்த பிறகே அந்தப் பணியில் தொடர வேண்டும் என விரும்பினார். தற்போது அதற்கான காலம் கனிந்ததை தொடர்ந்து, இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதேபோல் திருங்கையான பிரித்திகா யாசினி தற்போது உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில வருடங்களாக பல்வேறு துறைகளில் திருநங்கைகள் அசத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
