பீட்டாவை இந்தியாவை விட்டு துரத்த வேண்டும் என்றும் சல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும் பெரம்பலூரில் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடைப்பெற்றது.

சல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்கவும், அவர்கள் போடப்பட்ட வழக்குகளை இரத்து செய்ய கோரியும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் எதிரே இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தடை உத்தரவைத் தொடர்ந்து சல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. இந்தாண்டு சல்லிக்கட்டு அனுமதி கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் வெடித்து வருகிறது.

இந்த நிலையில், சல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தீர்ப்பளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்கள் அளிக்கப்பட்டு சல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி, பெரம்பலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தில், “பீட்டா இந்தியாவை விட்டு துரத்த வேண்டும். சல்லிக்கட்டு மீதான தடை உத்தரவை நீக்கி சல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். விவசாயிகளின் உயிரை பாதுகாக்க வேண்டும்.

சல்லிக்கட்டுக்கு ஆதரவுக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று காவலாளர்களால் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

போராட்டத்தில், அன்னமங்கலம், அரசலூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்களும், பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் என சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.