கனமழையால் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு; அருவிகளில் குளித்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..
தருமபுரி
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை படிப்படியாக குறையத் தொடங்கி மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 1800 கன அடியாக ஒகேனக்கல்லுக்கு வந்தது.
இந்த தண்ணீர், ஒகேனக்கல் பிரதான அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இவர்கள் அருவிகள் மற்றும் காவிரி கரையோரம் குளித்து மகிழ்ந்தனர்.
அதன்பின்னர் அவர்கள் பார்வை கோபுரம், தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு இரசித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.