மாற்றுத்திறனாளிகளுக்கான மாதந்தோறும் வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை ரூ. 1,500 யிலிருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை:
மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்ற தனித் துறை கடந்த 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் உயர்த்தப்படவில்லை. இதனால் மாதாந்திர உதவித்தொகையை 40 சதவீதம் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1,000லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கடும் ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.1,500 லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
பராமரிப்பு உதவித்தொகை உயர்வு:
40 சதவீதம் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் பராமரிப்பு தொகையானது, தெலுங்கானாவில் ரூ.3,016, ஆந்திராவில் ரூ.3000, புதுச்சேரியில் அதிகபட்சமாக ரூ.3,800 வழங்கப்படுகிறது. இதே போன்று, தமிழகத்திலும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கடுமையான இயலாமை; கடுமையான அறிவுசார் குறைபாடு; தசைச்சிதைவுகள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்புத் தொகையாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ரூ.1,500/- இனி ரூ.2,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.” என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்மூலம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 254 பேர் பயனடைவர் என்று கூறிய முதலமைச்சர், அரசுக்கு ஆண்டொன்றிற்கு 123 கோடியே 75 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என்று தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகள் என்று பெயர் சூட்டிய கலைஞரின் வழியிலே மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.
அரசாணை வெளியீடு:
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையை உயத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் 5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு தொகையை உயர்த்தி, நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை ரூ1,500 யிலிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் மனவளர்ச்சி குன்றியவர்கள், முதுகு தண்டுவடம், தசை சிதைவு நோய் பாதித்தவர்களுக்கு உதவிதொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சத்துக்கு 15 ஆயிரத்து 505 பேர் பயனடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை உயர்த்த முதற்கட்டமாக ரூ.31.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே தொழு நோய், நாள்பட நரம்பியல் நோய், தண்டுவட மரப்பு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் மாதந்தோறும் வழங்கப்படும் பராமரிப்பு உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்... தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!!
