அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் வரி ஏய்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களை அடுத்து வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி 3ம் தேதி அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரின் மகன் கதிர் ஆனந்த்துக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. மேலும், வேலூர் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: என்னது! இபிஎஸ்.க்கு உடல்நலக்குறைவா? சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்காததற்கு இதுதான் காரணமா?

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஈரோடு மாவட்டம் செட்டிபாளையத்தில் என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் என். ராமலிங்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர். இந்நிலையில் என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் சென்னை, ஈரோடு, பெங்களூர் வீடுகள் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோவையில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுமட்டுமின்றி கோவை, சென்னையில் தேனாம்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர், சாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான நிறுவனங்கள், எஸ்பிஎல் நிறுவனம் மற்றும் எஸ்.ஆர்.மெட்டல் நிறுனவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: தமிழகத்தில் இனி மழை இருக்கா? இல்லையா? சென்னையில் குளிர் எப்படி இருக்கும்? வானிலை மையம் தகவல்!

எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிய நிலையில் அதிமுகவினர் அவ்வப்போது பாஜகவையும் விமர்சித்து வரும் நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது. 

என்.ராமலிங்கத்தின் இளைய மகனுக்கும், பெருந்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்ற தொழிலதிபரின் இளைய மகளுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. சுப்பிரமணியம் வீட்டில் தான் எடப்பாடி பழனிசாமியும் தனது மகனுக்கு பெண் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.