சல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றவும், பீட்டா அமைப்பை தடை செய்யவும் வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். சல்லிக்கட்டு மீதான தடை உத்தரவை இரத்து செய்ய வேண்டும். விவசாயத்தை மீட்டெடுத்து, விவசாயிகளின் உயிரை பாதுகாக்க வேண்டும். சல்லிக்கட்டுக்கு ஆதரவுக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று காவலாளர்களால் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று போராட்டம் நடைபெற்றது.

இதில், பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள், குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த சுமார் 1,700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதேபோல, பெரம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் 350-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பயிலும் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி எதிரே தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலவலக வளாகத்தில் செயல்படும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பயிலும் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குன்னம் அருகேயுள்ள வயலப்பாடி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றிணைந்து, சல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் புதன்கிழமை பேரணியில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வேப்பந்தட்டை அருகேயுள்ள அன்னமங்கலம் கிராமத்தில் மாடுபிடி வீரர்கள், சல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர் மற்றும் கிராம பொது மக்கள் சார்பில் நடைபெற்ற பேரணி மற்றும் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பெரம்பலூர் மாவட்ட அட்வகேட் அயோசியேசன் சார்பில், 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.