Asianet News TamilAsianet News Tamil

போன வருடத்தில் சாதி ரீதியா எந்த கொலையும் நடக்கலையாம். சொன்னது காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன்…

in the-last-year-no-caste-related-murders-says-mayilvak
Author
First Published Jan 4, 2017, 8:27 AM IST


திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாதி ரீதியான கொலை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறியதாவது:-

“திருவாரூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 189 திருட்டு, 37 வழிப்பறி என மொத்தம் 226 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 75 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

முன்விரோதம் காரணமாக ஐந்து கொலை முயற்சி மற்றும் 20 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், சாதி ரீதியான கொலை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

காயம் அடைந்ததாக 408 வழக்குகள் மற்றும் வாகன விபத்து சம்பந்தமாக 176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிக விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விபத்தில்லா மாவட்டமாக மாற்றிட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட 22 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பிரச்சனைகளுக்காக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கனிவுடன் விசாரித்து மேல் நடவடிக்கைக்கு உரிய வழிகாட்டுதல் செய்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை கண்காணிக்க 911 இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 288 இடங்கள் கண்டறியப்பட்டு கேமிரா பொருத்தப்பட இருக்கின்றன.

பொதுமக்கள் குற்றச் சம்பவங்களை உடனடியாக காவலாளர்களுக்குத் தெரிவிக்க தொடங்கப்பட்ட “ஹலோ போலீஸ்” என்ற பிரிவுக்கு 622 அழைப்புகள் வந்துள்ளன. அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.

தனிப்பிரிவு ஆய்வாளர் இலட்சுமணன், துணை ஆய்வாளர் செந்தில்குமார், பிரேமா ஆகியோர் இந்தப் பேட்டியின்போது உடனிருந்தனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios