ஒ.பி.எஸ் அணி முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 2 ஆண்டு சிறை - சொத்துகுவிப்பு வழக்கில் ஊழல் தடுப்பு நீதிமன்றம் அதிரடி...
சொத்துகுவிப்பு வழக்கில் முசிறி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பிரின்ஸ் தங்கவேலுவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முசிறி தொகுதியில் 1989 மற்றும்1991 ஆகிய ஆண்டுகளில் அ.தி.மு.க, சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரின்ஸ் தங்கவேலு.
1991 ஆம் ஆண்டுமுதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
அப்போது வருமானத்திற்கு அதிகமாக 20 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு குறித்த விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இதுகுறித்த வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் பிரின்ஸ் தங்கவேலுவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் 3000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இதனிடையே அதிமுக இரண்டாக பிளவடைந்த நிலையில் பிரின்ஸ் தங்கவேலு ஒ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.