போலி ஃபாஸ்போர்ட் தயாரிக்க உதவிய காவலர் கைது…!!! – உயரதிகாரிகளுக்கு தொடர்பா?
சென்னையில் போலி ஃபாஸ்போர்ட் தயாரிக்க உதவியாக இருந்த காவலர் ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் ராமர். இவர் தனது பாஸ்போர்டை புதுப்பிக்க சென்றபோது, குடியுரிமை அதிகாரிகள் அது போலி ஃபாஸ்போர்ட் என்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். தகவலறிந்த போலீசார் ராமரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மண்ணடியை சேர்ந்த யூசுப் என்பவர் ராமருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்திருப்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து யூசுப் என்பவரையும் கைது செய்து விசாரித்தபோது, போலியாக தயாரிக்கப்படும் பாஸ்போர்டுகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க, நுண்ணறிவுப்பிரிவு போலீசார் பணம் வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து, போலி பாஸ்போர்ட் தொடர்பான ஆவணங்களை சேகரித்து வந்த மத்தியக் குற்றப்பிரிவு போலீசார்,இன்று காலை சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நுண்ணறிவுப்பிரிவு காவலர் முருகனை கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சங்கரநாராயணன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் ராமாபுரத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 3 நுண்ணறிவுப் பிரிவு காவலர்களையும் விசாரித்து வருகின்றனர்.