பேக்கரியில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஒருவர் பலத்த காயம்; குளிர்பான பாட்டில்கள், உணவுப் பொருள்கள் சேதம்...
பெரம்பலூர்
பெரம்பலூரில் அடுமனையில் (பேக்கரி) குளிர்சாதனப் பெட்டி வெடித்ததில் கடையில் வேலை செய்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கடையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட குளிர்பான பாட்டில்கள், உணவுப் பொருள்கள் சேதமடைந்தன.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள செரங்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (32). இவர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூரில் அடுமனை ஒன்று வைத்துள்ளார்.
இந்தக் கடையில், அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினரான கருப்பன் மகன் பாண்டி (20) வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று காலை கடையில் உள்ள குளிர்சாதனப் பெட்டி வெடித்ததில், அதனருகில் இருந்த பாண்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, காயமடைந்த பாண்டியை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்தில் கடையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட குளிர்பான பாட்டில்கள், உணவுப் பொருள்கள் மற்றும் கடையின் மேற்கூரைகள் உடைந்து சேதமடைந்தன.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், மின் கம்பியில் ஏற்பட்ட கசிவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.
இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.