பொதுமக்கள் அளிக்கும் எந்த ஒரு மனுவையும் நீண்ட காலம் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.

ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி, முதலமைச்சரின் தனி பிரிவு உள்பட பல்வேறு கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் ஆட்சியர் க. நந்தகுமார்.

“பொதுமக்கள் அளிக்கும் மனுக்களின் விவரங்கள், அரசு அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என அனைத்தும் ஆன் லைனில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அனைத்துத் துறை அலுவலர்களும் குறிப்பாக, முதலமைச்சரின் தனி பிரிவு, அம்மா அழைப்பு மையம் ஆகியவை மூலம் பெறப்படும் மனுதாரரின் கோரிக்கைகளை முழுமையாக கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பொதுமக்களின் கோரிக்கை ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஒரு மனுவையும் நீண்ட காலம் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது” என்றார் ஆட்சியர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) மு. துரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர். சிவராமன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் புஷ்பவதி, மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ், முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி உள்பட அனைத்துத் துறைகளின் முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.