தமிழக பள்ளிகளில் கல்வி சார் மற்றும் கல்வி சாரா நிகழ்வுகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இணையவழியில் கருத்துருக்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் பாவ - புண்ணியம், மறுபிறவி என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பள்ளிகளில் கல்வி சார் மற்றும் கல்வி இணை நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவர்கள் பள்ளிகளில் கல்வி சார் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளில் பங்கேற்க விரும்பின் தங்களது கருத்துருவை இணைய வழியே சமர்ப்பிக்கவும். அவற்றினை பரிசீலித்து அனுமதி வழங்குதல் உள்ளிட்டவற்றை விரைவுபடுத்த ஏதுவாக இணையவழி அமைப்பு உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் அரசு சாரா தொண்டு கருத்துருவை நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகள் தங்களது கருத்துருவை http://nammaschool.tnschools.gov.in என்ற இணைய மூலம் சமர்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளியின் மேற்கண்டுள்ள இணைய வழியே பெறப்படும் கருத்துருவானது தொடர்புடைய மாநில / மாவட்டக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு உரிய அனுமதி ஆணை இணைய வழியே வழங்கப்படும். மேற்கண்டுள்ளவாறு, இணைய வழியே பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் மாநில மற்றும் மாவட்ட அளவில் தனித்தனியே தகுதி வாய்ந்தோர் பட்டியல் பராமரிக்கப்படும். இப்பட்டியலில் இடம் பெறவும், பள்ளிகளில் கல்வி சார் நிகழ்வுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் இணைய வழியே விண்ணப்பிக்க தகவல் தெரிவித்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், மாவட்ட அளவில் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து மாவட்ட குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி அனுமதி வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மேலும், பள்ளி நிகழ்ச்சிகள், களப்பயணம், முகாம் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பார்வையில் கண்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உரிய அலுவலரின் முன் அனுமதி பெற பள்ளித் தலைமையாசிரிகள் https://ermis.tnschools.gov.in இணைய தளத்தின் வழியே தங்களது உள் நுழைவு பயனர் குறியீடு மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி Activities Event Registration form என்ற Menu வழியே விண்ணப்பிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு பரிசீலித்து சார்ந்த அலுவலர்கள் உடனுக்குடன் உரிய அனுமதி ஆணைகளை இணைய வழியே வழங்கிட வேண்டும். இத்தகவலை சார்நிலை அலுவலர்கள் மற்றும் தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

இச்செயல்முறைகள் பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதல் கடிதத்தினை மறுஅஞ்சலில் அனுப்பி வைத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், நிலையான வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் இச்செயல்முறைகளை மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு அனைத்து அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரிகள்/முதல்வர்கள் பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதலை பெற்று தங்கள் அலுவலகத்தில் பாரமரித்திடவும், கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.