மாணவர்கள் கவனத்திற்கு!! பள்ளிகளில் முழு பாடத் திட்டம் அமல்.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..
ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பாடத்திட்டம் ஏதும் குறைக்கப்படாமல், 2019 - 20 ஆம் கல்விஆண்டில் அமலான முழு பாடங்களும் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக கொரோனா ஊரடங்கு போடப்பட்டது. அப்போது பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன் லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டன. அவ்வப்போது கொரோனா குறைவு காரணாமாக பள்ளிகள் திறக்கப்பட்டாலும், அவை தொடர்ந்து நடத்தபடவில்லை. இதனால் வழக்கமான பாடத் திட்டத்தில், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 50 சதவீதமும் 9ம் வகுப்புக்கு 38 சதவீதமும் 10ம் வகுப்புக்கு 39 சதவீதமும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு 35 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டன. இதன் அடிப்படையில், பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டன.
இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் கோடை விடுமுறைகளுக்கு பிறகு கடந்த 13 ஆம் தேதி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.நடப்பு (2022- 23) கல்வி ஆண்டில், கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா முந்தைய படி, தனியார் பள்ளிகளில், மாணவர்களிடம் முழு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒன்று முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் 2019 - 20ம் கல்வி ஆண்டில் அமலான முழு பாடத் திட்டம் மற்றும் பாடங்கள், நடப்பு கல்வி ஆண்டிலும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய நிலையில் பாடத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பழைய படி பாடத் திட்டமும் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க: MGM குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை.. 40 இடங்களில் அலசி ஆராயும் அதிகாரிகள்.!