திருச்சியில் 13–வது ஊதிய குழுவை உடனே அமைக்க தொ.மு.ச. பேரவையில் வலியுறுத்தல்….
திருச்சி
திருச்சியில் நடந்த தொ.மு.ச பேரவை அனைத்து மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் 13–வது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
திருச்சி மாவட்டம், கலைஞர் அறிவாலாயத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் பேரவை அனைத்து மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இதற்கு தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். தலைவர் பஷீர் அகமது முன்னிலை வகித்தார். திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
இதில், “அரசுப் போக்குவரத்துக் கழக த் தொழிலாளர்களுக்கு 12–வது ஊதிய குழுவில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும்,
புதிய சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்கான 13–வது ஊதிய ஒப்பந்த குழுவை காலதாமதமின்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”
உள்ளிட்டக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அடுத்த கட்டமாக நடத்தவுள்ள போராட்டம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
தொ.மு.ச. பேரவை பொருளாளர் நடராஜன், திருச்சி மண்டல மத்திய சங்க தலைவர் குணசேகரன், பொதுச்செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் பேசினர்.
இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒரு மண்டலத்திற்கு மூன்று பேர் வீதம் தொ.மு.ச. நிர்வாகிகள் பங்கேற்றனர்.