அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தமிழ்நாடு வருவாய்த் துறையும் போராட்டக் களத்தில் குதிக்கும்.
நாகப்பட்டினம்
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணாவிட்டால் வருகிற 18-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்டக் கிளையின் அவசர செயற்குழுக் கூட்டம் நாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது.
இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் க.ரமேஷ் தலைமைத் தாங்கினார். மாவட்ட அமைப்புச் செயலாளர் ஆர்.ஜெயசீலன், மாவட்டச் செயலாளர் சு.விஜயராணி, பொருளாளர் க.சக்திவேல் ஆகியோர் இதில், பேசினர்.
இந்தக் கூட்டத்தில், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுத் துறை அலுவலர் சங்கங்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து, போராட்டக் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
இல்லையென்றால் வரும் 18-ஆம் தேதி முதல் வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.