“திருப்பதி பெருமாளுக்கு லஞ்சம்” என்ற கருத்து... எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதியலாம் என்கிறது உயர் நீதிமன்றம்
திருப்பதி கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவதை, கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது போல் என்று கருத்து கூறி விமர்சித்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் சென்னை மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, இந்து மதம் குறித்து அவதூறாகப் பேசியதாக திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்து மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், கடந்த 22-ம் தேதி சென்னையில் நடந்த (விசிறி) திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டுள்ளார். அதில் பேசிய அவர், உலக இந்துக்கள் வழிபடும் திருப்பதி திருக்கோயிலின் உண்டியலை, “லஞ்சம் பெறும் உண்டியல்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது இந்துக்களையும் இந்து மத நம்பிக்கையையும் கேவலப்படுத்தும் செயலாகும். மேலும், அத்திருக்கோயிலில் நீ உண்டியலில் காணிக்கை செலுத்தினால் நீ பாஸ் ஆகிவிடுவாயா? என்று கேட்டுள்ளார்.
கிறிஸ்தவராக இருக்கும் ஒருவர் இந்து மத நம்பிக்கையின் மீது தலையிட உரிமை இல்லை. ஆகையால், எஸ்.ஏ.சந்திரசேகர் மீது மத துஷ்பிரயோகம் செய்த பிரிவில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நாராயணனின் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை ஆணையர் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.