If someone takes alcohol bottles Ill shake up - breaking the pearl and threatening the girl
அரியலூர்
அரியலூரில் டாஸ்மாக் சாராயக் கடையை பெண்கள் அடித்து நொறுக்கியபோது, சாராய பாட்டில்களை எடுக்கவந்த ஆண்களை, பீர் பாட்டிலை உடைத்து வைத்துக் கொண்டு “யாராவது சாராய பாட்டில்களை எடுத்தால் குத்தி விடுவேன்” என்று பெண் ஒருவர் மிரட்டினார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே இருக்கிறது ஆர்.எஸ்.மாத்தூர் கிராமம். இங்கு, உள்ள டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் கடையின் முன்பு திராளாக கூடினார்.
இதனைக் கண்ட டாஸ்மாக் சாராயக் கடை ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இதனையடுத்து பெண்கள் டாஸ்மாக் சாராயக் கடையின் பூட்டை உடைத்து சாராய பாட்டில்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். சாராய பாட்டில்களை வெளியே தூக்கி வீசியும் சாராயக் கடைக்கு எதிர்ப்பு வலுவாக தெரிவித்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த ஆண்கள் சாராய பாட்டில்களை தங்களுக்கென்று போட்டி போட்டு எடுத்தனர். உடனே, அங்கிருந்த பெண் ஒருவர் சாராய பாட்டிலை உடைத்து வைத்துக்கொண்டு “யாராவது சாராய பாட்டில்களை எடுத்தால் குத்தி விடுவேன்” என்று ஆவேசமாக கூறினார். இதனைத் தொடர்ந்து சாராய பாட்டில்களை எடுக்க யாரும் முன்வரவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த செந்துறை காவலாளர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது பெண்கள் அவர்கள் முன்பாக சாராய பாட்டில்களை உடைத்தனர். பின்னர் பெண்கள், “இந்த டாஸ்மாக் சாராயக் கடையால் எங்கள் குடும்பமே சீரழிந்து விட்டது. குடும்பத்தை அழிக்கும் இந்த டாஸ்மாக் சாராயக் கடை எங்கள் ஊருக்கு வேண்டாம்” என்று அடித்துக் கூறினர்.
மேலும் “எங்களை மீறி கடையை திறந்தால் மீண்டும் அடித்து நொறுக்குவோம்” என்று கூறி அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
