Asianet News TamilAsianet News Tamil

காந்தி சந்தையை மூடினால் வணிகர்கள் போராட்டம் நடத்தி சிறை செல்வோம் - த.வெள்ளையன் எச்சரிக்கை...

If close gandhi market traders will protest and go to jail - t.vellaiyan warning...
If close gandhi market traders will protest and go to jail - t.vellaiyan warning...
Author
First Published Jun 30, 2018, 11:13 AM IST


திருச்சி
 
போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி காந்திசந்தையை மூடினால் வணிகர்கள் போராட்டம் நடத்தி சிறை செல்லவும் தயார் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் எச்சரித்தார்.

திருச்சி காந்திசந்தை அனைத்து வியாபார சங்கங்கள் சார்பில் ‘காந்திசந்தை இங்கேயே இயங்கும்’ என்ற தலைப்பில் கவன ஈர்ப்பு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. 

இதற்கு காந்திசந்தை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் பங்கேற்று பேசினார். 

இதில், வியாபாரிகள் முன்னேற்ற சங்க செயலாளர் மூர்த்தி, பொருளாளர் ஷபி அகமது, வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் ரவி முத்துராஜா, விவசாயிகள் சங்க தலைவர் ஐயாக்கண்ணு, மற்றும் பல்வேறு வியாபார சங்க பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், "காந்திசந்தை சில்லறை வியாபாரிகளை காக்க அவர்கள் இதே சந்தையில் தொடர்ந்து வியாபாரம் செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும், 

காந்திசந்தை வெளிப்புற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும், 

லாரிகளை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நகருக்குள் வர அனுமதித்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம், 

சீர்மிகு நகரம் எனப்படும் ஸ்மார்ட் சிட்டிக்காக காந்திசந்தை இடத்தை கையகப்படுத்தாமல் மாநகராட்சி நிர்வாகம் பழைய பால்பண்ணை, மகளிர் சிறை போன்ற பகுதியில் அமைக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்பின்னர், வெள்ளையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "திருச்சி காந்திசந்தைக்கு என்று நீண்ட வரலாறு உள்ளது. இந்தியாவிலேயே தேச தந்தை மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்ட ஒரே சந்தை என்ற பெருமை இதற்குண்டு. 

போக்குவரத்து நெருக்கடி பிரச்சனைக்காக இதனை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக் கூடாது. போக்குவரத்து பிரச்சனையை தீர்க்க மாவட்ட மாநகராட்சி நிர்வாகங்கள் வேறு வழி என்ன என்பது பற்றி ஆலோசிக்க வேண்டும்.

காந்திசந்தையை மொத்தமாக கள்ளிக்குடிக்கு மாற்றம் செய்தால் வியாபாரிகள் மட்டுமின்றி விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள். 

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்க பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளிக்குடி சந்தைக்கு கொண்டுச் செல்வதில் பல பிரச்சனைகள் ஏற்படும். 

போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி காந்திசந்தையை மூடினால் வணிகர்கள் போராட்டம் நடத்தி சிறை செல்லவும் தயார்" என்று அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios