இணையதள திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் - காவல் ஆணையர் எச்சரிக்கை
நாளேடுகள் மற்றும் சில இணைய தளங்களில் உள்ள செய்திகளை திருடி பதிவிட்டால், குண்டர் சட்டம் பாயும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்தித்தாள் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகும் செய்திகளை சிலர் அப்படியே டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து ஒரு வார இதழின் நிர்வாகி சென்னை காவல் துறை ஆணையருக்கு புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் போலீசார், தூத்துக்குடியை சேர்ந்த தனியார் நிறுவன மென்பொறியாளர் ஆனந்த் என்பவரை கைது செய்தது.
வெப்சைட்டுகளை ஆரம்பித்து கொடுக்கும் வேலை குறித்து இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். ஆனந்தின் விளம்பரத்தை பார்த்த ஒருவர், தனக்கு புதிதாக வெப்சைட் செய்து தர வேண்டும் என்று அவரிடம் வந்துள்ளார். பணத்தை வாங்கிய ஆனந்த் புதிதாக வெப்சைட்டை உருவாக்கி கொடுத்துள்ளார்.
அந்த வெப்சைட்டில் தினமும் வெளிவரும் நாளிதழ்களின் செய்திகள், வார இதழில் வரும கட்டுரைகள், மாத இதழ்களில் வரும் தொடர்கள் என பல தரப்பட்ட தகவல்களை அப்படியே பதிவிறக்கம் செய்துள்ளார். இதனால், ஆனந்தின் வங்கி கணக்கில் பணம் கிரடிட் ஆகியுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த செய்தி நிறுவனம், சென்னை சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தது. விசாரணையின்போது, வெப்சைட்டின் வங்கி கணக்கு கணக்கில் பல லட்சங்கள் வந்துள்ளது தெரியவந்துள்ளது. வங்கி கணக்கை ட்ரேஸ் செய்த போலீசார் அவரை காப்பிரைட் சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மேலும் ஆனந்திடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். ஆனந்தின் வாக்குமூலத்தை பெற்ற போலீசார், அனைத்து வெப்சைட்டுகளையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் கூறும்போது, நாளேடுகள் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகும் செய்திகளை திருடி சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவது, காப்புரிமை சட்டத்திற்கு எதிரானதாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் குண்டர் பாயும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மற்ற இணைய தளங்களில் வெளியாகும் செய்திகளை அப்படியே காப்பியடித்து மறுபதிப்பு செய்யும் சில இணையதளங்கள் இனி என்னென்ன சிக்கல்களை சந்திக்க போகின்றன என்று தெரியவில்லை.