வித்யாசாகர் ராவ் – டி.கே.ராஜேந்திரன் சந்திப்பு மரியாதை நிமித்தமானது - ஆளுநர் மாளிகை விளக்கம்….
தமிழகத்தின் டிஜிபியாக மீண்டும் பொறுப்பேற்றுள்ள டி.கே.ராஜேந்திரன் சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டி.கே.ராஜேந்திரன் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகவும் பொறுப்பை கவனித்து வந்தார்.
நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் டி.கே.ராஜேந்திரனுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்., தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவை சந்தித்து அவரிடம் முறைப்படி பணி நீட்டிப்புக்கான அனுமதி பெற்றார்.
குட்கா விவகாரம் பெரும் புயலை கிளப்பி வரும் நிலையில் டி.கே.ராஜேந்திரனுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை தமிழகத்தின் டிஜிபியாக மீண்டும் பொறுப்பேற்றுள்ள டி.கே. ராஜேந்திரன் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்.
இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கவர்னர் மாளிகையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.