ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முழு ஆதரவு தருகிறேன் – போராட்டக்காரர்களுக்கு எதிராக கிருஷ்ணசாமியின் குரல்!!!
பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுக்களை நம் மண்ணில் உற்பத்தி செய்யவிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தருவதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த 15 ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து தமிழகத்தில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடங்கியது.
மேலும் மாணவர்கள், இளைஞர்கள் சினிமா பிரபலங்கள் என ஆதரவு பலம் கூடிகொண்டே போக போராட்டம் சூடு பிடிக்க துவங்கியது.
ஏற்கனவே ஜல்லிக்கட்டுகாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் இளைஞர்களும் தற்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தில் இறங்கினால் அதில் வெற்றி நிச்சயம் என தமிழகத்தில் மாற்றம் வந்துள்ளது.
ஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் குரல் கொடுக்கும் நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
கிருஷ்ணசாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,, மத்திய அரசு பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுக்களை சொந்த மண்ணில் உற்பத்தி செய்யவிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் மூலம் அந்நிய செலவாணி குறைய வாய்ப்புள்ளதாகவும், இந்த திட்டத்தை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மக்களிடம் கருத்து கேட்கவும், அவர்களிடம் இதுகுறித்து தெளிவு ஏற்படுத்தவும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு மத்திய அரசு 11 லட்சம் ரூபாயை வழங்கியது. ஆனால் மாவட்ட நிர்வாகம் அதனை சரிவர செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.