பா.இரஞ்சித்துடன் பொங்கலை மகிழ்ந்து கொண்டாடினேன் - வத்கம் தொகுதி எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி டிவிட்...
பொங்கலை பா.இரஞ்சித்துடன் மகிழ்ந்து கொண்டாடினேன் என்று குஜராத் மாநிலம், வத்கம் தொகுதி எம்.எல்.ஏ-வும், தலித் சமூக இளம் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் பா.இரஞ்சித்.
குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரசு கட்சியின் ஆதரவுடன் வத்கம் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கி அபார வெற்றி பெற்றவர் தலித் சமூகத்தின் இளம் தலைவர் ஜிக்னேஷ் மேவானி.
இருவரும் நேற்று பொங்கலன்று சந்தித்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பு குறித்து இருவரும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்தும், புகைப்படத்தை பகிர்ந்தும் உள்ளனர்.
பா.இரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில், "தோழர் ஜிக்னேஷ் மேவானியை சந்தித்தது எதிர்பாராத இனிய தருணம். என் வீட்டுக்கு வருகை தந்தமைக்கு நன்றி.
உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துகள். உங்கள் எண்ணங்களுடன் ஒத்துப் போகிறேன். நீங்கள் செய்யும் பணியைத் தொடருங்கள். உங்கள் மீது மரியாதை கொண்டுள்ளேன்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதேபோல, ஜிக்னேஷ் மேவானி தனது டிவிட்டரில், "சூப்பர், டூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குநர் ரஞ்சித்தை சந்தித்தேன். இனிமையான நபர். அவருடனான சந்திப்பு அற்புதமானது. பொங்கலை அவருடன் மகிழ்ந்து கொண்டாடினேன்" என்று பதிவிட்டுள்ளார்.