அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் இணைந்ததற்கு தான் காரணமில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை மறுத்துள்ளார். தன் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் இணைந்ததற்கு தான் காரணம் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை தன் பொறுமைக்கும் ஓர் எல்லை இருக்கிறது என்றும் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின்போது அண்ணாமலை பேசியதாவது:
முதல்வருக்கு அறிவுரை:
"பிரதமர் நரேந்திர மோடி சொல்லாத ஒரு விஷயத்தை முதல்வர் கூறுகிறார். அவர் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடி தமிழக மக்களைப் பற்றித் தவறாகக் கூறிவிட்டதாக முதல்வர் கூறுகிறார். ஆனால், உண்மையில் திமுக தலைவர்கள் பீகார் மக்களை அவமானப்படுத்துவதாகத்தான் பிரதமர் மோடி பீகாரில் பேசினார். தயாநிதி மாறன், டி.ஆர்.பி. ராஜா, ஆ. ராசா போன்றவர்கள் தான் பீகார் மக்களை அவமானப்படுத்தினார்கள்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த விடமாட்டோம் என்று தமிழக அமைச்சர்கள் யாரேனும் சொன்னால், அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்குப் போக வேண்டும். இல்லையென்றால், மத்திய அரசு ஆட்சியை கலைத்துவிடுங்கள்.
அமித் ஷாவுக்குக் கொடுத்த வாக்குறுதி
"பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணமில்லை. அதிமுக-வில் சிலர் இன்றும் என்னைத் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஊகங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது. இன்று நான் அதிமுகவைப் பற்றிப் பேசுவதில்லை.
ஆனால், அதிமுகவில் இருக்கும் சில தலைவர்கள் இன்றும் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள். நான் திரும்பப் பேச, இரண்டு நிமிடங்களே போதும். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு (Amit Shah) கொடுத்த வாக்குறுதிக்காக நான் கட்டுப்பட்டு நிற்கிறேன்.
‘ஒரு சாதாரண தொண்டன்’
"தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றைக் கருத்தில்தான் நாங்கள் அனைவரும் இருக்கிறோம். அதற்கான நேரமும், காலமும் இன்னும் உள்ளது. அமித் ஷாவும், மோடியும் தூய அரசியலைக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் எனது வேலையை விட்டுவிட்டு வந்து நான் பாஜக-வில் பயணம் செய்கிறேன்.
தமிழகத்தில் நல்ல அரசியல் கொடுக்கக்கூடிய கூட்டணி உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணியில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக்கூடாது என்று கூறும் அதிகாரம் எனக்கு இல்லை. நான் ஒரு சாதாரண தொண்டன். பிடித்திருந்தால் இருக்கப் போகிறேன். இல்லை என்றால் கிளம்பப் போகிறேன்,"
இவ்வாறு அண்ணாமலை ஆவேசமாகப் பேசினார்.
