ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் – திமுக எம்.பிக்கள் பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தல்...
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திமுக எம்பிக்களான கனிமொழி மற்றும் திருச்சி சிவா பெட்ரோலியத் துறை அமைச்சரிடம் நேரில் சந்தித்து வழங்கினர்.
விவசாயம் மற்றும் நிலத்தடி நீரை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி நெடுவாசல் மக்கள் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு ஆதாரவு தெரிவித்து அரசியல் கட்சிகளும், இளைஞர்களும், மாணவர்களும், சினிமா பிரபலங்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி சட்டசபை எதிர்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தை திமுக மாநிலகலவை உறுப்பினர்கள் திருச்சி சிவா மற்றும் கனிமொழி ஆகியோர் டெல்லி சென்று தர்மேந்திரா பிரதானை நேரில் சந்தித்து கொடுத்தனர்.
இதையடுத்து திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் அளித்தோம்.
அத்துடன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதையும் தெரிவித்தோம்.
நாட்டின் வளர்ச்சிக்காக இத்தகைய திட்டங்கள் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இங்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்படுவதாலும், நிலத்தடி நீர் முற்றிலுமாக அழிந்து போகும் அபாயத்தினாலும் இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதை தெளிவு படுத்தினோம்.
அப்படி முக்கியமான திட்டம் என்று நீங்கள் கருதினால் திட்டம் பற்றி முழுமையாக மக்களிடம் தெளிவுபடுத்தி, அவர்களை மாற்ற முயற்சியுங்கள் என்றும் நாங்கள் தெரிவித்தோம்.
நாங்கள் கூறிய கருத்துக்களை பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
எந்த ஒரு திட்டமானாலும் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் நிறைவேற்றப்படாது என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இவ்வாறு அவர் கூறினார்.