"ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை" – மத்திய அரசு விளக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட 51 இடங்களில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை, நன்மைதான், மாநில அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிலக்கரி, பெட்ரோலியம், சமையல் எரிவாயு, நாப்தா உள்ளிட்ட அனைத்து பொருட்களின் கலவை ஹைட்ரோகார்பன். இந்த வாயுவை பூமிக்கு அடியில் இருந்து எடுக்க குறைந்தபட்சம் 4 ஆயிரம் அடி ஆழத்துக்கு துளையிட வேண்டும்.அதன்பின் பூமிக்கு அடியில் உள்ள நீர், உள்ளிட்டவற்றை வெளியேற்றி வாயுக்களை எடுக்க வேண்டும், இதுதான் ஹைட்ரோ கார்பன் திட்டம்.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவயல், வடகாடு, கள்ளிக்கொல்லை, நல்லந்தூர் கொல்லை உள்ளிட்ட பலபகுதிகளில் நீர் வளம் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்து போகும் என அச்சம் நிலவுகிறது.
இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒருவாரமாக நெடுவாசல் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்தை மத்தியஅரசு வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மக்களுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகளும் பாகுபாடின்றி ஆதரவு அளித்து வருவதால், ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு அடுத்தபடியாக இங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழகத்துக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு எந்த உடல்நலக்குறைவும் ஏற்படாது, நிலத்தடி நீர் மாசுபடாது, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் உலக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் விவசாயிகள் அதே நிலத்தில் விவசாயத்தில் ஈடுபடலாம், நிலம் பாழடையாது, அச்சப்படத்தேவையில்லை என்றும் மத்தியஅரசு கூறியுள்ளது.
இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தினால், ரூ.300 கோடி லாபமும், அதன் மூலம், மாநில அரசுகளுக்கு ராயல்படி தொகையாக ரூ.40 கோடியும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.