ஹைட்ரோ கார்பன் திட்டம் தீவிரம்... புற்று நோய் பாதிப்பில் நெடுவாசல் மக்கள் - பரபரப்பு தகவல்கள்
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 14 நாட்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இங்குள்ள வானக்கன்காடு பகுதியில் 1993ம் ஆண்டு மாரிமுத்து என்பவரது நிலத்தில் 13,500 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின் 1996ம் ஆண்டு மீண்டும் மாரிமுத்துவிடம், அந்த இடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட பகுதியில் இருந்து வாயுகசிவு ஏற்பட்டு வெளியேறியது. இதனால் அப்பகுதி மக்களுக்கு திடீர், திடீர் என மயக்கம் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மேலும் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டது.
இதனால் இப்பகுதியில் 16 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் நில உரிமையாளர் மாரிமுத்து மற்றும் எஸ்.ராமன், வேலன், மற்றொரு ராமன், கல்யாணி மூர்த்தி, காமாட்சி உள்பட 8 பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டு இறந்தனர்.
மாரிமுத்துவின் மனைவி அன்னக்கிளி மற்றும் செல்வம், சின்னாத்தா உள்பட 8 பேர் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செல்வம், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சின்னாத்தாவுக்கு கழுத்தில் கட்டி ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 50க்கும் மேற்பட்ட கால்நடைகளும் இறந்துள்ளன. இதனால் கோட்டைக்காடு பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆரோக்கியமேரி, லியோ, ஆரோக்கியமேரி, நேசா, செபஸ்த்தியான் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.