கள்ள உறவை கண்டித்ததால் கள்ளக்காதலியுடன் ஊரைவிட்டு ஒடிய கணவன்; ஆட்சியரிடம் மனைவி பரபரப்பு புகார்...
பெரம்பலூர்
பெரம்பலூரில் கள்ள உறவை மனைவி கண்டித்ததால் மூன்று பெண் குழந்தைகளுடன், கள்ளக் காதலியை அழைத்துகொண்டு கணவன் ஊரைவிட்டு ஒடிவிட்டார். இதுகுறித்து மனைவி ஆட்சியரிடத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள கீழப்புலியூர் கிராமம் பர்மா காலனியைச் சேர்ந்தவர் கந்தசாமி (42). எலக்ட்ரீசியனான இவருடைய மனைவி நல்லம்மாள் (37). இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கந்தசாமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ள உறவு ஏற்பட்டது. இதனை அறிந்த நல்லம்மாள், கந்த சாமியைக் கண்டித்தார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நல்லம்மாளிடம் வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டுச் சென்ற கந்தசாமி மீண்டும் வீடு திரும்பவே இல்லை. மற்றொரு பக்கம் கந்தசாமியின் கள்ளக் காதலியையும் காணவில்லை.
இதனால் அவர்கள் ஊரைவிட்டு ஓடிவிட்டனர் என்று நல்லம்மாள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுத்தார்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மங்களமேடு காவலாளர்களுக்கு, ஆட்சியர் உத்திரவிட்டார்.
அதன்பேரில் மங்களமேடு காவல் ஆய்வாளர் மகாலெட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.