மனைவியை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த கணவர் - 4 வருட வழக்கில் அதிரடி தீர்ப்பு...
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் மனைவியை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து 4 வருட வழக்கில் தீர்ப்பளித்தார் கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்ற நீதிபதி.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தை அடுத்த பி.அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா என்கிற சிவப்பா (30). கட்டிட மேஸ்திரியான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சியாமளா என்கிற சாரதா (22) என்பவரும் காதலித்து கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.
சிவாவிற்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனைவி சாரதாவை அடித்து கொடுமைப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தாராம்.
இந்த நிலையில் கடந்த 9.11.2014-ஆம் ஆண்டு குடிபோதையில் வந்த சிவா மனைவி சாரதாவிடம் தகராறு செய்தார். ஒருகட்டத்தில் போதை தலைக்கேறிய சிவா, வீட்டில் இருந்த ஊதுகுழலால், தனது மனைவியை பின்பக்க தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் மயங்கிய அவரை மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக கெலமங்கலம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்த கொலை வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அன்புசெல்வி நேற்று தீர்ப்பு கூறினார்.
அதன்படி. "மனைவியை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த சிவாவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து" தீர்ப்பு கூறினார்.
இதைத் தொடர்ந்து சிவாவை காவலாளர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.