மனைவி இறந்த சோகம் தாங்கமுடியாமல் கணவன் கிணற்றில் குதித்து தற்கொலை; விரக்தியில் விபரீதம்...
நீலகிரி
நீலகிரியில் மனைவி இறந்த சோகம் தாங்க முடியாமல் விரக்தியில் திரிந்த கணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இறந்தவர் முன்னாள் இராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள பழைய அருவங்காடு நேரு நகரைச் சேர்ந்தவர் தீபக் (40) முன்னாள் இராணுவ வீரர். இவருடைய மனைவி அன்னம்மாள் ஷீலா. இவர்களுக்கு ஆலிஸ்டர், ஷேலிஸ்டர் ஆகிய இரண்டு மகன்கள் உண்டு.
இவரது மனைவி அன்னம்மாள் ஷீலா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார் தீபக். தனது இரண்டு மகன்களையும் கூடலூரில் உள்ள தனது மாமியார் வீட்டில் விட்டுவிட்டு நேரு நகரில் தீபக் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக தீபக்கை காணவில்லை என்று அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். இருந்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
நேற்று அந்த பகுதியில் உப தலை ஊராட்சிக்கு சொந்தமான 40 அடி கிணற்றில் தீபக் பிணமாக மிதந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து அருவங்காடு காவலாளார்களுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த குன்னூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் மிதந்த தீபக்கின் உடலை வெளியே கொண்டு வந்தனர். பின்னர், அங்கு வந்த அருவங்காடு காவல் ஆய்வாளர் வெங்கடேசன், உதவி ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், காவலாளர்கள் நடத்திய விசாரணையில், தீபக் தனது மனைவி இறந்ததால் விரக்தியில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இரண்டு மகன்களை தனியாக தவிக்கவிட்டு மனைவி இறந்த சோகத்தால் தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.