வேலியே பயிரை மேய்ந்ததா? வன்முறை குறித்து விளக்கமளிக்க சென்னை போலீசுக்கு நோட்டீஸ்…
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டக்காரர்கள் மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் பொது மக்கள் மீது நடைபெற்ற தடியடி சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம்தாமாகவே முன்வந்து, அரசு தலைமை செயலாளர், டி.ஜி.பி., மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்குநோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீசில், சென்னையில் நடைபெற்ற தடியடி சம்பவங்கள் குறித்துஊடகங்களில் வெளிவந்த செய்திகளை ஆணையம் கவனமாக பார்த்ததில், எவ்வித தூண்டுதலும் இன்றி போலீசார்மேற்கொண்ட நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது..
தமிழக இளைஞர்களும்,மாணவர்களும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவது தொடர்பாக மிகவும் அமைதியானமுறையில் அறப்போராட்டத்தை ஒரு வாரத்துக்கும் மேலாக மேற்கொண்டு வந்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டக்காரர்களை பாதுகாக்க வேண்டியவர்களே அவர்களுடைய அடிப்படைஉரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல வீதிகளில் குடிசைகள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள், தெருவோரம் உள்ள காய்கறி கடைகள் போன்றவற்றை போலீசாரே தீயிட்டுக்கொளுத்தியதை தொலைக்காட்சிகளில் தெளிவாக காணமுடிந்தது.
மாணவர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள ரத்தம் சொட்டச்சொட்ட அலறி அடித்துக் கொண்டு ஓடுவதையும்காணமுடிந்தது.
போலீசார் பல வீடுகளில் அத்துமீறி நுழைந்து பலரையும் கடுமையாக தாக்கி இருக்கின்றனர்.
சென்னை நகரம் மற்றும் மெரினா கடற்கரைக்கு செல்லும் சாலைகளை போலீசார் போக்குவரத்துக்கு தடை செய்து ,அத்துமீறல்களில் ஈடுபட்டனர் என தேசிய மனித உரிமை ஆணையம் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
எனவே, தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் சென்னையில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தேசிய மனித உரிமைஆணையத்துக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி மீனாகுமாரி, இந்த வன்முறை சம்பவம் குறித்து தாமாக முன்வந்து ஒரு வழக்கு பதிவு செய்துள்ளார்.
மேலும் . மெரினாவில் நடந்த தடியடி சம்பவம் குறித்து அனைத்து விவரங்களுடன் 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல்செய்யவேண்டும் என்று டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இது தொடர்பாக உயர்மட்டக்குழு ஒன்று விசாரணை நடத்தி வருகிறது. .
