சென்னை மெரினாவில் 1 கி.மீ. தூரத்துக்கு மனித சங்கிலி - தொடரும் மாணவர்களின் போராட்டம்
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த, மத்திய அரசை வலியுறுத்தி கடும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு பொது நல அமைப்பினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல், ரயில் மறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டிக்கு கல்லூரி மாணவர்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் தினமும் நூதன முறையில் கருப்பு பானையில் பொங்கலிடுவது, கருப்பு துணியை கண்ணில் கட்டி ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை காமராஜர் சாலை களங்கரை விளக்கம் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கல்லூரி மாணவர்களின் மனித சங்கலி போராட்டம் தற்போது நடந்து வருகிறது. இதில், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக இந்த மனித சங்கலி போராட்டம் நடத்துவதற்கு, வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் வாயிலாக பொதுமக்களுக்கு தகவல் பரப்பட்டது. இதை பார்த்த ஏராளமானோர் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, தமிழர்களின் கலாச்சார உடையான வேட்டியை சிறுவர்கள் அணிந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பலர் வந்துள்ளதால், அப்பகுதியி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைதியான முறையில் நடத்தப்படும் இந்த மனித சங்கிலி போராட்டம், மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதே எங்கள் நோக்கம் என இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கூறினர்.