How to escape from natural disaster Training in swimming pools headed by the Collector ...

சேலம்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சேலத்தில் உள்ள காந்தி விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில் இயற்கை பேரிடரில் இருந்து தப்பிக்கும் மீட்புபணி குறித்த பயிற்சி ஆட்சியர் ரோகிணி தலைமையில் நடத்தப்பட்டது.

சேலம் மாவட்டம் காந்தி விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில், “வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்புபணி நடவடிக்கை” குறித்த பயிற்சி நேற்று நடைபெற்றது.

இந்தப் பயிற்சியை ஆட்சியர் ரோகிணி தலைமை தாங்கி தொடங்கி வைத்துப் பேசினார்.

அப்போது அவர், “வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. இதனால் பேரிடர் மேலாண்மை பிரிவின் மூலம் மாவட்டத்தில் இயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்புபணி குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர்படை ஆகியோருடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆட்சியர் அலுவலகத்தில் முதல் நிலை பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பேரிடர் மேலாண்மையின்போது மீட்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் அதிகளவில் தெரிந்து கொள்ளவும், முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு மீட்புப்பணிகள், முதலுதவி அளித்தல் குறித்த செயல் விளக்க பயிற்சி இங்கு நீச்சல் குளத்தில் செய்து காண்பிக்கப்பட்டது.

இயற்கை பேரிடர் காலக்கட்டங்களில் எவ்வாறு பாதுகாப்பாக செயல்படுவது? என அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது கடமையாகும்” என்று பேசினார்.

இந்த பயிற்சியில் சேலம் உதவி ஆட்சியர் குமரேசன், பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தார் ராஜேஷ்குமார், சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடாசலம், சாய் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.