35 ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தை காலி செய்ய சொன்னால் எப்படிங்க? கிராம மக்கள் ஆட்சியரிடம் முறையீடு...
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் 35 ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தை காலி செய்ய கோரியதால் ஆட்சியரிடத்தில் கிராம மக்கள் முறையிட்டனர்.
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் நடராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்ற மக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.
அதன்படி, பரமக்குடி தாலுகா பாண்டியன் தெரு மற்றும் எஸ்.பி.எம்.காலனி பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த கொடுத்த மனுவில், "நாங்கள் கடந்த 35 ஆண்டுகளாக இந்த பகுதியில் குடியிருந்து வருகிறோம்.
நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் வரி, மின்வாரிய ரசீது, ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்தும் எங்கள் வீடுகளின் முகவரிக்கு பெற்றுள்ளோம்.
இந்த நிலையில் நாங்கள் குடியிருக்கும் பகுதி அரசின் புறம்போக்கு நிலத்தில் உள்ளதால் உடனடியாக காலி செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளோம்.
ஆனால், இதனை மீறி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வீடுகளை இடித்து தரை மட்டமாக்கிவிட்டனர். மீதமுள்ள வீடுகளையும் இடிக்க முயன்று வருகின்றனர்.
எனவே, உடனடியாக இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதோடு, இத்தனை ஆண்டு காலமாக வசித்துவரும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்" என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டனர்.